Sunday 4 March 2012

"காந்தியின் தீண்டாமை" - மருத்துவர் நா.ஜெயராமன்

"தீண்டப்படாத வகுப்பு மக்களின் நண்பனாகத் திரு .காந்தி செயல்படாதது  மட்டுமன்று ,ஒரு நேர்மையான எதிரியாகவும் அவர் நடந்து கொள்ளவில்லை
                                                                                          "டாக்டர் .பி .ஆர் . அம்பேத்கர் .

எனது "காந்தியின் தீண்டாமை" நூலில் நான் எழுதியுள்ள முன்னுரை ........


‘மகாத்மா காந்தி’ என்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனக்குள் பிரவேசிக்கத் தொடங்கியது அனேகமாக எனது 5வது வயதில் எனக் கணக்கிட்டுப் பார்க்கின்றேன். அது என் ஆரம்பக் கல்விக்காகப் பள்ளிக்குச் சென்ற வயது. நகராட்சிப் பள்ளியாக இருந்தபோதும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை காந்தியின் பஜனைப் பாடல்களைப் பாட வேண்டும். ஒரு மணி அடிப்பார்கள், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தரையில் சப்பணமிட்டு அமர்ந்தபடி இரண்டு கைகளையும் கும்பிட்டபடி தலை தரையைத் தொடும்படி உட்கார்ந்து கொண்டு, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ தொடங்கி ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கு காந்தியின் பாடல்களைப் பாடுவோம்.

1ம் வகுப்பில், வகுப்பு ஆசிரியர், தலைமையாசிரியர் தவிர பள்ளிக்குள் இருந்த ஒன்றிரண்டு ஆசிரியர்களை நான் அறிந்திருந்தேன். இந்த ஆசிரியர்கள் அல்லாத ஒரு உருவமும் பெயரும் என்னுள் இருந்தது. அதுதான் ஸ்ரீமான் காந்தி. அந்த பால்ய வயதிலேயே, என்னுள் புகுத்தப்பட்ட  முதலானவரும் அவரே. வகுப்புகளுக்குத் தவறாமல் வந்த ஒவ்வொரு மாணவனுக்கும் இது தான் நிலைமை. மேலும் நான் படித்த நகராட்சிப் பள்ளி இருந்த பகுதியும் காந்தி நகர். தலைமை ஆசிரியரின் நாற்காலிக்குப் பின்புறச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படத்திற்குரியவராகவும், பஜனை செய்வதற்குரியவராகவும், பாடப் புத்தகங்களில் படிப்பதற்குரியவராகவும், சுதந்திர தினம், குடியரசு தினம், அவர் பிறந்த தினம் போன்ற நாட்களில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மைதானத்தில் நடக்கும் இறைவணக்கக் கூட்டமாக இருந்தாலும், அனைத்திலும் பேசப்பட்ட, பேச வைக்கப்பட்ட ஒருவர் அவர்தான், பிறகுதான் நேரு மாமா!

இதன் விளைவாக 9, 10ம் வகுப்புகள் படிக்கும்போது, நான் இருந்த பகுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி, காந்தி பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் நடத்திய நாட்கள் எல்லாம் இன்னமும் பசுமையாகவே நினைவில் இருக்கின்றன. காந்தி தாத்தாவாகவும், நேரு மாமாவாகவும் என்னுள் கருத்துருவாக்கப்பட்டது தான் இதற்கான மூலகாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த பாதிப்புகள் எனக்குள் மட்டும் அல்ல. ஏறத்தாழ என் வயது, அதற்கு மேலும் உள்ள வயதினருக்கும் கூட இதுதான் நிலைமை. இது உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அல்ல. உள்ளே திணிக்கப்பட்டது. இன்றைக்கும் கூட, இதுதான் இந்தியத் திணிப்பாக இருக்கின்றது. இந்தியாவில் வேறு எந்தத் தலைவரையும் இந்த அளவிற்குத் திட்டமிட்டுத் திணிக்கவில்லை!

1960களில் தொடங்கி 1974 வரை, ஆரம்பக்கல்வி முதல் மருத்துவக் கல்லூரி மாணவனான பிறகும் கூட, பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் என்ற ஒருவர் என்னுள் வரவேயில்லை. ஏப்ரல் 14, 1975-ம் ஆண்டு சகோதரர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் அவர்கள் என்னையும் டாக்டர்.ஜெயவேல் அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்னை, நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வெளியே நின்ற, பிரமாண்டமான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்கச் செய்தார்.

இடஒதுக்கீட்டில் இடம்பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தொடங்குவதற்கு முன்புவரை, எத்தனையோ முறை விண்ணப்பப் படிவங்களில் 18% இடஒதுக்கீட்டில், இடம்பெற விண்ணப்பித்திருக்கின்றேன். இடமும் பெற்றேன், ஆனால் அதுவரை கூட, இந்த இடஒதுக்கீடு கிடைக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான சட்டத்தை எனக்கும், என் சமூகத்திற்கும் பெற்றுக் கொடுத்த, இந்த மாபெரும் புரட்சியாளரைப் பற்றி அறியாதிருந்தேன். என் போலவே, அன்றும் இன்றும் கோடிக்கணக்கான தலித்துகள் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் நான், என் பெற்றோர், என் சமூகத்தலைவர்கள் மட்டுமல்ல. நான் பயிற்றுவிக்கப்பட்ட கல்வி என்பது இப்படியாகத்தான் அன்று இருந்தது. இன்றும், இன்னமும் அப்படியே தான் இருக்கின்றது. சகோதரர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் அவர்கள் பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் பற்றி அவருக்குத் தெரிந்த செய்திகளையும், அவரின் சமூகவாழ்வு பற்றியும், அவருடைய கருத்துகளை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய தேவையையும் அடிக்கடி சொல்வார். அதுமட்டுமல்ல, எனக்குள் அதுவரை இருந்துவந்த ‘காந்தி என்ற மாய பிம்பத்தையும்’ முதன்முதலாக உடைத்தவரும் அவர்தான். ‘காந்தி நம் மக்களின் அரசியல் சமூக விடுதலையைக் கெடுத்த மோசமான பிற்போக்குவாதி, இம்மக்களுக்காக பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் போராடியதையும், ஸ்ரீமான் காந்தி அதற்கு நேர் எதிர் விதமாகச் செயல்பட்ட வரலாற்றுச் சம்பவங்களையும்’ சந்திக்கும் போதெல்லாம் எடுத்துரைப்பார்.

இதன் விளைவுகளாகத்தான் நான் பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் நூல்களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஜோதிபாய் பூலே, அயோத்திதாசப்பண்டிதர், தாத்தா இரட்டைமலை சீனுவாசன் போன்றவர்களின் நூல்களைப் படித்த போதும், சுபாஷ்சந்திரபோஸ், பகத்சிங், ஊத்தம்சிங் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகளாலும், தந்தை பெரியார் காந்தியுடன் முரண்படும் இடங்களாலும், காந்தி மீது நான் அன்று கெண்டிருந்த எண்ணங்கள் கொஞ்சம்கொஞ்சமாகச் சரியத் தொடங்கின. ஜவகர்லால் நேரு, எம்.ஓ.மத்தாய் மற்றும் Freedom at Midnight’ எழுதிய லேப்பியர் & காலின்ஸ் போன்றவர்களின் கருத்துக்களும் மாறுபட்டிருந்தன.

1934-ல் வியன்னாவில் இருந்து, சுபாஷ்சந்திரபோஸ் எழுதி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட நூலான ‘இந்தியப்போர்’ என்ற நூலைப் படித்தபோதுதான், காந்தியின் சுதந்திரப் போராட்டமே கேள்விக்குரியதாக இருந்தது. காந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இந்தியர்களைக் கிரகிக்கும் ஓர் அபூர்வ சக்தி காந்திஜீயிடமிருக்கிறது. பிறிதொருநாட்டில் அவர் ஜனித்திருந்தால் அந்நாட்டில் அவர் முற்றுந்தகுதியற்றவராகவே இருந்திருப்பார். அங்கு அவரது சாத்வீகம் அவருக்கு ஆபத்துண்டாக்கியிருக்கும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அது இந்தியாவில் வேறுவிதம்...” (இந்தியப்போர் - பக்கம் 169) இந்தியாவின் ஒப்பற்ற விடுதலை வீரர் சுபாஷ் சந்திர போஸ் காந்தியைப் பற்றி, இவ்வாறு குறிப்பிட்டது, காந்தியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை என்னுள் ஏற்படுத்தியது. காந்தி அவர்களின் சுயசரிதையைப் படிக்கும்போது தான், தலித் மக்களின் சமூக விடுதலையில் இவரின் பங்கு என்னவாக இருந்தது என்பதை முழுமையாக அறிய முடிந்தது. காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? (What Gandhi and Congress have done to the untouchables) என்ற பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் எழுதிய அந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்கள்.

ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் காந்தி குறித்த கருத்தரங்குகள் எங்கேயும், எப்போதும் நடைபெறுவதில்லை. அப்படி நடக்கும் கூட்டங்களில் எல்லாம், பெரிய பேச்சாளர் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவருமே அதிக நேரம் பேசும் பகுதி, தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் பங்களிப்பு பற்றியது தான். காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிஜனங்கள் என பெயரிட்டு அவர்களையெல்லாம் கடவுளின் குழந்தைகளாக மாற்றினார். தீண்டாத மக்கள் இன்று கல்வியறிவு, அரசுப் பதவிகள் பெற்றுள்ளதற்கெல்லாம் காந்தியின் உழைப்புதான் காரணம். ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கப் போராடினார். அவர்களின் பேச்சுகளில் அத்தனையும் வரலாற்றுப் பொய்களாகவும், அலங்கார வார்த்தைகளுமாகத்தான் இருக்கும்.

புதுக்கோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக சங்கத்தினர் காந்தி பிறந்த நாளில் ‘அன்னியப்பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்ற தலைப்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தவறுதலாக, என்னையும் அங்கு பேச அழைத்திருந்தார்கள். காலை வேளை மருந்துவப்பணிகளை முடித்துக்கொண்டு;, இரண்டு மணியளவில் பேசுவதற்காகச் சென்றேன். தலைவருக்குத் துணையாக நான்கு பேர்கள் துணைக்கிருந்தனர். திரைப்படப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. தலைவர் என் காதுக்கருகில் மெதுவாக, இப்போது உணவு இடைவேளை மாலை நான்கு மணியளவில் வந்து பேச முடியுமா? என்றார். நானும் சரி என்று விடைபெற்று மீண்டும் நான்கு மணியளவில் பேசச் சென்றேன் அப்போது என்னுடன் சமநீதி எழுத்தாளர் ஏ.பி.வள்ளிநாயகமும் உடன் வந்திருந்தார். அப்போது பேசிக் கொண்டிருந்தவர், அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு பற்றி ஏதும் பேசாமல் காந்தியின் பெருமைகளைப் பற்றியும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அடுத்ததாக நான் பேச அழைக்கப்பட்டேன். ஒரு சில தகவல்களை மட்டும் மேலோட்டமாகக் கூறினேன். தலைவரைத் தவிர மற்றவர்கள் கையைப் பிசைய ஆரம்பித்து விட்டனர். மதிய உணவு அருந்திவிட்டு உண்ணாவிரதப் பந்தலில் ஓய்வெடுத்தவர்களின் உறக்கம் கலைந்துவிட்டது. நான் பேச்சை முடித்துக் கொண்டால் போதும் என்ற அளவிற்கு சலசலப்பு ஏற்பட்டது. பேச்சை முடித்து விட்டேன்.

மருத்துவமனைக்குத் திரும்பும் வழியில் அண்ணாச்சி வள்ளிநாயகம், “தீண்டாமையை காந்தி ஒழித்தார், காந்தி ஒழித்தார்” என்றே பேசுகிறார்களே, ‘நீங்கள் ஏன் தீண்டாமை ஒழிப்பு என்ற பெயரில் காந்தியின் சூழ்ச்சிகளைப் பற்றி ஒரு நூல் எழுதக்கூடாது என்றார். இந்தத் தலைப்பில் நூல் எழுதவேண்டும் என்று என்னை முதன் முதலில் உற்சாகப்படுத்தியவர் அண்ணாச்சிதான். நானும் யோசித்துப் பார்த்தேன். நான் படித்த காந்திநகர் பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கியமன்ற விழாப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு, ‘தீண்டாமையை ஒழிக்கக் காந்தி பாடுபட்டார்,’

‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிசனங்கள் எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்,’ ‘தீண்டத்தகாதவர்களின் சமூக முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்’ என்றெல்லாம் அன்று பேசி முதல் பரிசு பெற்றதெல்லாம் எனக்குள் வேடிக்கையாகத் தோன்றியது. அன்று நான் பேசி முதல் பரிசு பெற்றதற்கும், இன்று இவர்கள் பேசுவதற்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தோன்றவில்லை, இரண்டும் ஒன்று தான்.

நான் தெளிவு பெற எனக்குள் ஒரு சமூகத் தேவை இருந்தது. காந்தியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக வைத்துக்கொள்ள வேண்டுமென்பவர்கள் மெத்தப்படித்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இந்து மதத்தைப் புனிதப்படுத்த வேண்டுமென்பதற்காத் தீண்டத்தகாத மக்களுக்கெதிராகக காந்தி நடத்திய சூழ்ச்சிகளையும், நயவஞ்சகங்களையும், துரோகத்தனத்தையும் எந்தவித சமரசமுமின்றி அம்பலப்படுத்த வேண்டும். தீண்டாமையை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு தீண்டத்தகாதவர்களைத் தான் ஒழித்துக்கட்டினார் என்ற உண்மைகளையெல்லாம் இந்தத் தலைமுறையினருக்குத் தெரிவிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் மேல்மட்ட அதிகாரிகள் இன்றும் கூட மனிதநேய வார விழாக்களும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டு, தீண்டாமையை காந்தி ஒழித்தார் என பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் பேசுகின்றனர். பேசுகிறவர்களுக்கு வெட்கமில்லை கேட்கின்றவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. இந்த அதிகார வர்க்கங்களுக்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரையும் தெரியாது. காந்தியையும் தெரியாது. மிச்சசொச்சம் உள்ள இந்தத் தலைமுறைக்குக் காந்தியின் உண்மை முகத்தைக் காண்பிக்க வேண்டும் என எண்ணியிருந்த வேளையில், 2005-06ம் ஆண்டில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியில், டாக்டர்.அம்பேத்கர் முதுகலைப் பட்டயப்படிப்பில்(P.G.DAS) சேர்ந்து, ‘காந்தி – தலித் விடுதலையின் விரோதி’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துப் பட்டமும் பெற்றேன். இந்தக் கட்டுரையை இன்னும் விரிவாக்கம் செய்து நூலாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.

அவர்கள் கேட்டதற்கும், நான் இசைந்ததற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் தெளிவுபட உள்ளன.

இறந்து 59 ஆண்டுகள் முடிந்த பிறகும் கூட எதற்காக அவர் விவாதிக்கப்பட வேண்டும்? இறந்ததற்குப் பிறகு புகழ் பாடுவது அல்லது அவர்களது நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்வது என்பது மரபாக இருந்தும் கூட, ஏன் இந்த முயற்சி? ஒரு சிறு பிரிவு மக்களைத் தவிர இந்தியாவின் அனைத்துப் பிரிவு மக்களும் காந்தி என்ற பெயரை புனிதமானதாக எண்ணிப் போற்றிக் கொண்டிருக்கின்றனர். அவரே மகான், அவரே மகாத்மா என்றும், புத்தர், ஏசு வரிசையில் அவரைச் சேர்த்து, அவரை அருள் பாலிப்பவராக மாற்ற வேண்டும் என்பதற்காக, அவர்கள் வரிசையில் இவரைச் சேர்த்து, அவர்களை மறைமுகமாகக் கீழிறக்கியதை மட்டும் சாதித்து வரும் இவருடைய அடிவருடிகளுக்கு இடையில், இதை ஒருபணியாகச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? உலக அரங்கில் இவரே அனைத்தும் என்றும், மார்க்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய எழுத்தாளர்கள் ‘இந்து மதம்’ உன்னதமானது என்று வரைந்துதள்ளியது போல், காந்தியும் மகாபுருஷன் என்று அளந்து விடப்பட்டார். சமீபத்திய, ஆகஸ்ட் 2009 தேதியிட்ட ‘தீராநதி’ என்ற தமிழ் சஞ்சிகையில் வந்த ஒரு செய்தி என்னை அதிர வைத்ததும் கூட இந்த வெளீயிட்டைக் கொண்டுவரக் காரணமாயிருந்தது. அதாவது, யுனெஸ்கோ நிறுவனம் ‘1947’-ல் வெளியிட்டிருக்கும்’ கல்வி குறித்த சிந்தனையாளர்கள் (THINKERS OF EDUCATION) புத்தகத் தொகைப்பில், உலகின் பெரும் புகழ்பெற்ற சிறந்த கல்வியாளர்கள் நூறு பேருடைய அர்ப்பணிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கன்புய+சியஸ், கிரேக்கத்தின் பிளேட்டோ, ஆஸ்திரியாவின் பிராய்டு, இத்தாலியின் கிராம்ஸி போன்றவர்களோடு இந்தியாவின் பிரதிநிதியாக இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் காந்தி, தாகூர், அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா.

டாக்டர். மால்கம் ஆதிசேஷையா, தாகூர் தவிர மற்ற மூவருக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு? மற்ற மூவரும் ஆன்மிகவாதிகள். பிளேட்டோ, பிராய்டு வரிசையில் வருமளவிற்கு காந்தி கல்வியாளரா? இந்தியாவில் கல்வியாளர்களுக்கு இவ்வளவு கடும் வறட்சியா? அல்லது கன்பூசியஸ், கிராம்ஸி அளவிற்குக் காந்தி கல்விச் சிந்தனையாளரா? எதுவுமே இல்லாத ஒருவரை உயர்த்துவதற்கு என்ன காரணம்?

அந்தக் காலங்களில் இந்தியாவில் கல்வி என்பது ஒரு சாதியினருக்குச் சொந்தமானதாக இருந்தது. மற்றவர்கள் அந்தக் கல்வியைக் கற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தனர். ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் படிப்பது தண்டனைக்குரிய குற்றமாகவே இருந்து வந்தது. அதையும் கடந்து கல்வி கற்க வந்தவர்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார்கள். காந்தி பிறந்த போர்பந்தருக்கு அருகில் உள்ள ‘கவித்தா’ என்ற கிராமத்துத் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியதால், அவர்களின் குடிநீர்க் கிணற்றில் பலமுறை மண்ணெண்ணெய் ஊற்றிக் குடிநீரை விஷமாக்கினார்கள். இறுதியில் அந்த மக்கள் ஊரைவிட்டு நாடோடிகளாக விரட்டப்பட்டனர். இதுவும் காந்தியின் கண்முன்னே, அவரின் ஆசீர்வாதத்தோடு தான் நடந்தது. சாதிக்கு ஒரு கல்வி, சாதிக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு தொழில் என்று வர்ணம் இன்றும் கோலோச்சுகிற காலத்தில், கல்வி கற்பதனாலும், அதன் மூலம் சமூகப் பொருளாதாரம் உயர்வதனால் மட்டும்தான் நடந்தது. சாதிக்கு ஒரு கல்வி, சாதிக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு தொழில் என்று வர்ணம் இன்றும் கோலோச்சுகிற காலத்தில், கல்வி கற்பதனாலும், அதன் மூலம் சமூகப் பொருளாதாரம் உயர்வதனால் மட்டும்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பது பொது நியதியாகவும், மாற்றாகவும் கற்றவர்களால் கணக்கிடப்படுகின்றது. ஆதிக்க சாதியினரைத் தவிர மற்ற தீண்டாதவர்கள் (அன்று 6 கோடி) கல்வி கற்பதற்குத் தடையாயிருந்த தத்துவம் வர்ணம். வர்ணம் தான் அனைத்து இழிவுகளுக்கும், வன்கொடுமைக்கும் காரணமாயிருந்தது, இருக்கின்றது. வர்ணம் ஒழியாத வரை தீண்டாமை ஒழியாது. அந்த வருணம் குறித்து காந்தியின் செயல்திட்டம் என்ன?

வருணத்தை ஒழித்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க காந்தி என்ன செய்தார்? காந்தி கல்வியாளர் என்றால் அனைவரும் கல்வி கற்கத் தடையாயிருக்கும் வர்ணம் ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் ஸ்ரீமான் காந்தி வருணத்தைப் போற்றிப் பாதுகாக்கின்றார் எப்படி? ‘வர்ணம் விதித்ததுதான் நியதி. அது மாற்றமில்லாதது. ஆகர்ஷண விதியை நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த விதி இருந்தது போல் வர்ணமும் என்றென்றும் இருந்து கொண்டும் இயங்கிக் கொண்டுமிருக்கின்றது. வர்ண விதியை நாம் பின்பற்றி நடக்காததனால் தான், பொருளாதார அழிவுக்குக் காரணமாக உள்ளது. மேலும், மக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் காரணமாயிருக்கின்றது’ என்று எச்சரிக்கின்றார். மேலும் ‘அந்த வர்ண விதிகளுக்கு மாறாக நடப்பதால், அவர் தனக்குத்தானே கேடு விளைவித்துக் கொண்டு, இழிநிலையை அடைகிறார். மேலும் பதராகி விடுகின்றார்’ என்று விவரிக்கின்றார். வர்ணம் ஒரு மனிதருக்கு – என்ன தொழிலை விதித்துள்ளதோ அந்தத் தொழிலைத்தான் அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத் தச்சரின் மகன் தான் ஒரு வக்கீலாக வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியதில்லை.ஆனால் இன்று ஒரு தச்சரின் மகன் வக்கீலாக வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில், பணம் திருடுவதற்கு, அந்தத் தொழில்தான் மிக்க எளிதான வழி என்பதை அவர் அறிந்து கொண்டிருக்கின்றார். (மகாத்மா காந்தி நூல்கள் தொகுப்பு -7, பக்கம்89,90,91)

வர்ணம் விதித்த தொழில்களுக்கு ஏற்ப ஒருவன் தன் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். தச்சனின் மகன் நூறு ஆண்டுகளுக்கு முன் தச்சனாக இருந்தது போல் இன்னும் தச்சனாகவே இருக்க வேண்டும். வர்ணம் நிர்ணயித்த அந்தக் குலத்தொழிலை விட்டு, இன்று வக்கீலாக வேண்டும் என்று ஒருவன் விருப்பப்பட்டால், அவன் பணம் திருடுவதற்கு இந்தத் தொழிலை மாற்றிக்கொள்கின்றான், என்கிறார்.

மருத்துவனாக மாற விரும்பினால் அவனைத் திருடன் என்கிறார்! பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு தேசத்தைக் கல்வி தானே சீர்படுத்தும்! லெனின் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபோது சோவியத் ரஷ்யாவில் படித்தவர்கள் எண்ணிக்கை 2%. தோழர் அந்தன் மொகரங்கோவிடம், கல்வி பயிற்றுவிக்கும் பொறுப்பினைக் கொடுத்தபோது, லெனின் வேண்டிக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். ரஷ்யாவில் உள்ள மக்கள் நூறு சதவீதம் கல்வி கற்றவர்களாக மாற்றப்பட வேண்டும் என்பது தான். பத்தே ஆண்டுகளில் 2 சதவீதமாக இருந்த படித்தவர்களின் எண்ணிக்கையை 98 சதவீதமாக மாற்றிக் காண்பித்தாரே! லெனின் கல்வியாளர். ஆனால் இவர் குலத்தொழிலை விட்டுவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்கிறார்!

இவரைப்போய் உலகில் தோன்றிய கல்வியாளர்கள் பட்டியலில் இடம் பெயரச் செய்துள்ளனரே! இந்தியாவில் கல்வியாளர்களுக்கு இவ்வளவு கடும் வறட்சியா? ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு காந்தி தான் குரு, குலக்கல்வித் திட்டம்தான் இந்தியாவைச் சமூகப் பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றும் என்றும் கூறுபவர் கல்விமானா?

அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இறந்து இத்தனை ஆண்டுகளான பின்பும் கூட ‘மகாத்மா’ என்ற புளித்த ஏப்பம் விடுவதையே, வாழ்நாள் பணியாக மேற்கொண்டுள்ளவர்கள் மத்தியில் எனது தேடல் வேறுவிதமாக இருந்தது. காந்தியின் ‘அரசியல்’ பற்றிய விமர்சனங்கள், அவர் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, பகத்சிங் மரணத்தில் ‘வஞ்சக நாடகமாடியது’ தொடர்பாக வந்த விமர்சனங்களே இன்று வரைக்கும் ஆவணமாக உள்ளது. அதற்குள் போகத் தேவையில்லை. பொருளாதாரம் குறித்த அவரது பார்வையில் அவர் காலத்தில் வாழ்ந்த 35 கோடி இந்தியர்களுக்குமான எந்தச் செயல் திட்டமும் இல்லை. 35கோடி 110 கோடியாக உயர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுமளவிற்கு அவரிடம் பொருளாதார ஞானமும் பொருளாதாரம் குறித்த அடிப்படைச் சிந்தனையும் இல்லை. தொலைநோக்கு அறிவும் இல்லை. அடுத்ததாக ‘இந்தியாவின் தொழுநோயான’ தீண்டாமையைப் போக்குவதற்குப் பதிலாக, சாதியக் கொடுங்கோன்மையைத் தூக்கிப் பிடித்த காந்தியின் கோர முகத்திரையை பாபா சா கேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ‘காந்தியும், காங்கிரஸ_ம் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?’ (What Gandhi and Congress have done to the untouchables?) என்ற நூலில் கிழித்துக் காண்பித்துள்ளார்).

இந்திய அரசியல்வாதிகளும், வரலாற்றுப் புரட்டர்களும் அவரைக் கடவுள் நிலைக்குக் கூட உயர்த்திப் பிடித்துக் கொள்ளட்டும். ஆனால் நான் அவர்களிடமிருந்து வேறுபடுகின்றேன். மற்றவர்களுக்கு அவர் மகாத்மாவாக இருந்துவிட்டுப் போகட்டும். இந்தியாவில் அன்று 6 கோடியாக இருந்த தலித் மக்கள் இன்று 30 கோடிக்கு மேலாக உள்ள இவர்களின், சமூக, பொருளாதார வாழ்நிலை என்பது இந்து மதத்தில் உள்ள நான்கு வருணத்தாரால் முடக்கப்பட்டு இருக்கின்றது என்பதை நன்கு அறிந்தவர் காந்தி. அம்மக்களின் அரசியல் சமூக விடுதலைக்காக, பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் போராடிப் பெற்ற உரிமைகளைக் ‘கீழ்த்தரமான சாகசத்தின்’ மூலம் அம்மக்களுக்குச் சென்றடையவிடாமல் தடுத்தவரை நான் எப்படி மகாத்மாவாக ஏற்றுக் கொள்ள முடியும்? நல்லவர் என்பவர் அனைவருக்கும் நல்லவராக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஆதாயம் தேடிக் கொடுத்ததால், நல்லவர் என்று அவர்களால் போற்றப்படலாம். ஆனால் எனக்கும், என் சமூகத்திற்கும் கேடு விளைவித்த, வஞ்சகர் ஒருவரை எப்படி நான் மகானாக ஏற்க முடியும்? என் உயிரின் வாதையை என்னால் தான் உணர முடியும். என் மீது திணிக்கப்பட்ட அவமானத்தின் அருவருப்பை என்னால் தான் அறிய முடியும்! எனக்கும் என் சமூகத்திற்கும் திட்டமிட்டுத் தீங்கிழைத்தவர்களை நான் எப்படி சக மனிதனாகப் பார்க்க முடியும்?

இன்னமும் கூட, இந்தியாவில் தலித் மக்கள் வாழ்கின்ற பெரும்பான்மைக்குடியிருப்புப் பகுதிகளுக்குப் பெயர் ‘காந்தி நகர்!’ - இது அவமானப் பெயர் அல்லவா? எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு எழுப்பப்பட்ட பெயரல்லவா? “நல்ல நிலம் உருவாக வேண்டுமெனில், அங்குள்ள தேவையற்ற முட்புதர்களை அழித்தாக வேண்டும” என்று கூறிய உலகின் முதல் அழித்தொழிப்பாளரான புத்தரை, பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சற்றுக் காலதாமதமாக (24.9.1932 – க்குப்பின்) உள் வாங்கிவிட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது.

காந்தி பிறப்பதற்கு முன், இந்தியாவில் ஒரு வேளை நால்வருண அமைப்பு இல்லாதிருந்தால், காந்தியே நால்வருண அமைப்பை உருவாக்கியிருப்பார் அல்லது இந்து அல்லாத ஒரு சமுதாயத்தைப் பற்றிப் பேசியிருந்தால் அவரே அந்தச் சமூகத்திற்கு நால்வருண சமூகக் கட்டமைப்பின் சிருஷ்டிகர்த்தாவாக இருந்திருப்பார் என்ற வாதத்தை ஆச்சார்ய வினோபா பாவே பின்வருமாறு வைக்கின்றார். “காந்தி வேறு தேசத்தில் பிறந்து வளர்ந்;திருந்தால் அல்லது வேறு ஒரு சமூகத்தை நோக்கிப் பேசியிருந்தால், வர்ணாசிரம தர்மம் என்ற வார்த்தையும், அதன் உட்கருத்தும் அவருக்குச் சுயமாகவே உருவாகியிருக்கும் ……………….., இதே பாஷையில் இல்லாவிட்டாலும்;@ வேறு எவ்வாறேனும் இதன் அடிப்படைக் கொள்கைகளை அவர் ஏற்றுக் கொண்டிருப்பார்”. (கிஷோர்லால்.க.மஷ்ரூவாலா எழுதிய ‘காந்தியும், காரல் மார்க்சும் என்ற நூலின் முன்னுரையில், பக்கம்.30)

முடை நாற்றமடிக்கும் இந்து மதத் தத்துவங்களுக்கு இப்படியெல்லாம் கூட வியாக்கியானம் செய்ய அந்நாளில் காந்தியைச் சுற்றி ஒரு மாபெரும் கூட்டமே இருந்தது. மாமேதை காரல் மார்க்ஸோடு, காந்தியின் பொருளாதாரத்தை ஒப்பிடக்கூடிய அசம்பாவிதங்கள் எல்லாம் கூட அரங்கேறியிருக்கின்றன என்றால் எப்படியெல்லாம் தூக்கிப் பிடித்திருப்பார்கள் என்பதை யூகித்துக் கொள்ளலாம். காந்தி, ஊதி ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட ஒரு மாயத்தோற்றம்.

பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கூட பார்ப்பனியத்திற்கு அவர்கள் மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பதைப் போலவே, தீண்டத்தகாத மக்களாக்கப்பட்ட தலித்துகளுக்கு, காந்தியின் தலித் விரோத, நால்வருணச் சிந்தனைகள் இன்னும் கூட ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன. “புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகின்றார்கள்” என்கிற புரட்சிகர வாசகம் ஒன்று உண்டு. ஆனால் பார்த்தீனியம் விதைக்கப்படுவதில்லை. ஒரு மூல விதை போதும். காந்தி என்ற ஒரு பார்த்தீனியம் பல பார்த்தீனியச் செடிகளை உருவாக்கிவிட்டது.

காந்தியவாதிகளாலும், நுனிப்புல் மேயும் சில படித்த மேல்தட்டு வர்க்க தலித்துகளாலும், ஆதிக்க சாதியினராலும் காந்தி புகழப்படுவதற்கு சில காரணங்கள் இல்லாமல் இல்லை. தீண்டாமை, பார்ப்பனீயம் போன்றவை குறித்து, அவ்வப்போது அவர் திருவாய் மலர்ந்து பல செய்திகளைக் கூறியிருக்கின்றார். சாதிவெறி பிடித்த இந்துக்களுக்கு ‘காந்தியே’ தீண்டாமை குறித்து இவ்வளவு பேசியிருக்கின்றார். அப்புறம் என்ன? இது போதாதா! ‘தீண்டாமை பாவம்’, ‘தீண்டாமை இரக்கமற்ற செயல்’ என்று சொல்லிவிட்டார். எனவே இவர்தான் இந்தியாவில் தீண்டாமையை ஒழித்துக் கட்டிய தீராதிதீரர். தீண்டமைக் கொடுமை நீங்கி இந்து மதம் புனிதமாகி விட்டது. எனவே இந்துமதத்தை விட்டு தலித்துகள் வெளியேறத் தேவையில்லை. ‘தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் காந்தி தான்’ என்று அவரது துதிபாடிகள் புகழந்து திரிகின்றனர். ‘இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நானே தலைவர்’ என்று (இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், காந்தி தன்னை இவ்வாறுதான் பிரிட்டிஷ் பிரதமர் மாக்சே ராம் டொனால்டு முன்பு அறிவித்துக் கொண்டார்) அவரே பிரகடனம் செய்து, பின் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டு அவமானப்பட்டுப் போனார்.

தீண்டாமை, வர்ணம் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “வர்ணத்திற்கு நான் சொல்லும் பொருளில் மேலோர் கீழோர் என்னும் வேற்றுமைக்கு இடமே இல்லை”. (யங் இந்தியா 20.10.27)

“என்; அபிப்ராயத்தில் பரம்பரையாய் அல்லது சுயமாய் அடைந்த உயர்நிலை என்பதே இல்லை…….. எல்லோரும் பிறக்கையில் சமமாகவே பிறக்கினறனர்.

பிறப்பினாலோ பின் அடைந்த ஞானத்தினாலோ பிராமணர் தங்களை மேல்சாதியார் என அழைத்துக் கொள்ளும் இடங்களிலெல்லாம் நான் அவர்களை எதிர்த்திருக்கின்றேன். இன்னொரு மனிதனை விடத் தான் உயர்ந்தவனாகக் கருதுவது மனிதத்தன்மையற்ற செயல் என்பது என் கருத்து………… ஆகையால் பிராமணனிடமோ, வேறு எவனிடமோ இந்த உயர் சாதிப்பேய் தலைகாட்டுவதை பிராமணன் அல்லாதான் எதிர்க்கையில் அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்கிறேன். உயர்ந்தவனென்று தன்னைக் கருதுவோன், தான் மனிதனாய்க் கருதப்படுவதற்குள்ள உரிமையை இழந்து விடுகின்றான் என்பது என் அபிப்ராயம்” (யங் இந்தியா 29.9.1927)

இந்து மதம், நால் வருணத் தத்துவம் பற்றி என்ன கூறுகிறது என்று வலுக்கட்டாயமாகவே, ஜெயேந்திர சரஸ்வதியிடம் விவாதம் செய்துவிட்டு அவமானப்பட்டு வந்தார். லோகமான்ய திலகரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள 1.8.1920-ல் காந்தி அங்கு சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்கு, தோள் கொடுக்க காந்தி சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையை தொடக்கூடாது” எனக் கூறி அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (தனஞ்செய் கீர் எழுதிய ‘லோகமான்ய திலகர்’ – ஆங்கில நூல் பக்கம்.442). நால் வருணக் கட்டமைப்பில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்க்கே இதுதான் மரியாதை. பிணத்தைத் தொடுவதற்குக் கூட அருகதையற்றவராகத்தான் காந்தி பார்ப்பனர்கள் கண்களுக்குப் பட்டாரே தவிர, இந்திய தேசத்தின் விடுதலையை முன்னிறுத்துபவராகத் தெரியவில்லை. இதுதான் இந்துமதம். இதற்குப் பிறகும் கூட ‘வருணத்திற்கு’ இவர் பொழிப்புரை எழுதுவது இந்து மதம் பற்றிய அடிப்படை அறிவு, அறவே கிடையாது என்பதைத் தவிர வேறு ஏதும் இல்லை!

‘தீண்டாமை, இரக்கமற்ற செயல்’ என்பதைச் சொல்ல ‘மகாத்மா’ தேவையில்லை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் தெருக்குழந்தை கூட தீண்டாமையின் கொடுமையைப் பார்த்துக் காறித் துப்பும். இவர் என்ன இரக்கப்படுவது! இவரின் இரக்கம், வெண்மணியில் வெந்த எம் குழந்தைகளின் மயிருக்குக் கூட உதவாது. தீண்டாமையின் இழிவினை அவமானத்தை 24 மணிநேரமும் நேருக்கு நேர் எதிர் கொள்பவனுக்குத் தான் அதன் வேதனை என்னவென்று உணர முடியும்!

அடுத்ததாக இவர் சொல்கின்றார்: “உயர் சாதிப் பேய் தலைகாட்டுவதை பிராமணன் அல்லாதவன் எதிர்க்கையில் அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்கிறேன்”…….

தெற்கே, மாபெரும் இயக்கப் போராளி தந்தை பெரியார் பிராமணனை நேருக்கு நேர் எதிர்த்தபோது, இவரும் இவரோடு குல்லாப் போட்டுக் கொhண்டிருந்த கூட்டமும் எத்தனைமுறை பெரியாரோடு இணைந்து, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தனர் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா? அல்லது பெரியாரைப் பற்றியும் அவரது இயக்கம் தமிழ் நாட்டில் நடத்திய போராட்டங்களும் இவருக்குத் தெரியாமல் போய்விட்டதா?

வடக்கே வாழும் ஆத்மாக்களுக்குத் ‘தெற்கே’ ஒரு நிலப்பரப்பும், அங்கு மக்களும் வாழ்கின்றார்கள் என்பதும் கூட தெரியாமல் போய்விடும். இந்த ‘பரமாத்மாக்கள் தான்’ என்றுமே ‘இந்திய தேசியம்’ பேசுவார்கள். போகட்டும். ஆனால் வடக்கே பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்ற மாபெரும் புரட்சியாளர், இந்தியாவின் பார்ப்பனர்களைப் புரட்டிப் புரட்டிப் போட்டு அவர்களின் வருணாசிரமத்தையும், புராண, இதிகாசப் புரட்டுகளையும் ‘சௌதார் குளக்கரையில்’ குழிதோண்டிப் புதைத்தாரே! அது கூடவா இவர் காதுகளுக்கு எட்டாமல் போய்விட்டது? பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரோடு இவரும், இவரது காங்கிரஸ{க் கூடாரமும் எத்னை பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தின? அப்போதெல்லாம் இவர் எங்கே போயிருந்தார்? எத்தனை போராட்டகங்களை இவரே முன்நின்று நடத்தினார்? இதற்கு ஏதேனும் ஆதாரப்பூர்வமான சான்றுகள் உண்டா? ஒரு ‘மகாத்மா’ பேசியதற்கும் அது செயல்பட்டதற்கும், ஏதேனும் தொடர்பு உண்டா?

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, தொலைநோக்குச் சிந்தனையில்லாத, நேரத்திற்கு ஏற்றாற்போல் பைத்தியக்காரத்தனமன அறிக்கைகளை வெளியிடுவதும், யாரேனும் கேள்வி கேட்டால் அன்று சொன்னதை விட்டு விடுங்கள், இன்று சொல்வதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நேற்று உளறியதற்கு விளக்கம் கூறி வந்ததை மற்ற அரை வேக்காட்டுத்தனமான அறிக்கைகளோடு வைத்துக் கொண்டிருக்க வேண்டியது தானே! நால் வருணத்தின் கொடூரத்தைப் பற்றி இவர் ஏன் இப்படி அபத்தமாகப் புதுப்புது வியாக்கியானங்கள் செய்ய வேண்டும்?

அன்றைய தேதியில் 35கோடி மக்கட்தொகையும், மிகப்பெரிய நிலப்பரப்பும் கொண்ட தேசம் அன்னியராட்சியில் சுரண்டப்பட்டு வந்த காலத்தில் (அவர்கள் சுரண்டுவதற்காகவே, பல திட்டங்கள் தீட்டினாலும்) மக்களின் அடிப்படைத் தேவையான போக்குவரத்திற்கு ரயில்களும், ஆரோக்கியத்திற்கு மருத்துமனைகளையும் கட்டிவந்ததை, இந்த தேசத்திற்குச் சுதந்திரம் வேண்டும் என்று தலைமையேற்று நடத்திவந்த ‘சுதந்திரப் போராட்ட வீரர்’ கூறுகிறார்….. “ரயில்வேக்களும், ஆஸ்பத்திரிகளும் இயல்பாக அழிவதை நான் நிச்சயம் வரவேற்பேன், என்றாலும் அவற்றை நாசம் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உயர்ந்த பரிசுத்தமான ஒரு நாகரீகத்துக்கு ரயில்வேக்களோ, ஆஸ்பத்திரிகளோ சான்றாகாது. அவை அத்தியாவசியமான ஒரு தீமையாக இருக்கின்றன என்பது தான் அவை பற்றி கூறக்கூடிய சிறப்புரையாகும்”. (யங் இந்தியா 26.1.1921) புத்தகம் - காந்தியன் தொகுப்புகள். பகுதி-6)

இதுபோன்ற ‘அறிவார்ந்த’ கருத்துகளைக் கூறி வந்த சிந்தனைக் கடலின் ஒப்பற்ற அறிக்கைகளை அவருடைய துதிபாடிகள் வேண்டுமானால், பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இவரின் ‘கருத்துகளும்’ ‘செயல்பாடுகளும்’ தான் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் ‘பிடுங்கி எறிந்தது’ என்ற வரலாற்றுப் பொய்யை நாம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்?

காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஏன் போராடவில்லை? என்று எந்த தலித்தும் எந்தக் காலத்திலும் கேள்வி எழுப்பியது இல்லை, அது தேவையும் இல்லை. எம் மக்களின் பிரச்சனைகளுக்குப் போராட எமக்கென்று தலைமை இருக்கின்றது. ஊலக வரலாற்றில் அடிமைகளின் எசமானர்கள் ஒருபோதும் தலைமையேற்றது கிடையாது. எமக்கு விடுதலை வாங்கித் தருவதாக வஞ்சகம் பேசி, எம் மக்களின் விடுதலை வேட்கையை நீர்த்துப் போகச் செய்த தலைவர்கள் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கின்றது. எமது விடுதலைக்காகப் போராடிய எமது ஒப்பற்ற தலைவர்களின் பணிகளை, எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களிடம் எம் தலைவர்களைப் பற்றிய தவறான புரிதல்களை ஏற்கச் செய்த சாகசங்கள் எல்லாம் வழிநெடுக ஏராளமாகப் பரவிக் கிடக்கின்றன.

இன்றைய இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். இவர்களின் உடல் உழைப்பு என்பது ஆப்பிரிக்க தேசத்து நீக்ரோக்களைவிட வலிமையானது. ‘உழவுத் தொழிலை நிந்தனை செய்தவர்கள்’, உழவர்களான இவர்களையும் நிந்தனை செய்தார்கள். அனைத்துத் தொழில்களையும் இவர்களே செய்யும்படி நிந்திக்கப்பட்டார்கள். ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகப் பழகிப்போன இவர்களின் வாழ்க்கை முறை இன்னமும் இதுவாகத்தான் இருந்து வருகின்றது. இவர்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை உயர்நிலையை எட்ட முடியாததாக உள்ளது. இம்மக்கள் இன்னமும் இறந்த தங்களின் உறவினர்களைத் தூக்கிச் செல்வதற்கான பாதைகளுக்காகவும், புதைப்பதற்கான இடங்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மட்டும் இன்னமும் 22 ஆயிரம் கிராமங்களில் இரட்டைக் குவளை முறை அமலில் இருந்து வருவதாகப் பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.

பௌத்தம் கோலோச்சிய காலங்களில் இவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் தர்க்க நிலைகள் வெகுவாகச் சிறப்புற்றிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் செழுமையாக உள்ளன. பூர்வ பௌத்தர்களான இவர்கள், பார்ப்பனியத்தால் சிதறடிக்கப்பட்டு, திருநிலையற்றவர்களாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டார்கள். பார்ப்பனியம் வெற்றி பெற்று, இவர்கள் இந்துக்களாக்கப்பட்டனர். மீண்டும் நால்வர்ணப் படிநிலை சமூகம் வந்த பின்பு இவர்கள் இந்து மதத்தின் பின் இணைப்பாகக் கருதப்படுகின்ற பஞ்சமர்கள் என்ற வர்க்கமாக்கப்பட்டார்கள். அதன் பின்னர் தொடர்ந்து இம்மக்கள் வஞ்சிக்கப்பட்டே வந்தனர். கல்வி கற்கும் வாய்ப்பு தொடர்ந்து திட்டமிட்டே மறுக்கப்பட்டு வந்ததால், இவர்கள் சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்வு பெற முடியாமலேயே இருந்து வந்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கால்பதிக்கத் துவங்கிய பிறகுதான், இவர்களுக்குக் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளைச் சிந்திப்பதற்கான சூழல் ஏற்பட்டது. ஜோதிபாய் பூலே என்ற சமூகச் சிந்தனையாளர் இம்மக்களின் சமூகப் பொருளாதார, அரசியல் மேம்பட்டிற்காகச் சிந்திக்கத் தொடங்கினார். காலத்திற்கேற்ற வகையில் இவர்கள் தங்கள் பகங்களிப்பினைத் தொடர்ந்து செய்து வந்தனர்.

1891 ஏப்ரல் 14-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளில் ஒன்றான மகர் இனத்தில் பிறந்த பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகத் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்தின் விடியலுக்கு நிரந்தரத் தீர்வை ஆங்கிலேயர்களிடம் போராடிப் பெற்றார். ‘என் சமூகத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும்’ என்று உழைத்த அந்தப் புரட்சியாளரின் கனவை, காந்தி என்ற இந்துமத வெறியர் தன் நயவஞ்சகப் போராட்டத்தினால் கிடைக்க விடாமல் தடுத்தார்.

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான குஜராத்தில், போர்பந்தர் என்னும் ஊரில், தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாகப் பாதுகாத்து வந்த ‘பணியா’ என்ற ஆதிக்க சாதியில், 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி, திவான் கரம்சந்த் காந்தியின் மகனாகப் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இவரே இந்திய விடுதலைப் போரின் நாயகராகப் பின்னாளில் பிரகடனப்படுத்தப்பட்டார். இந்தியாவின் பார்ப்பன, பணியா கும்பலின் அரசியல் விடுதலைக்காக, (ஆட்சி மாற்றத்திற்காக) ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சாத்வீகப் போராட்டம் நடத்தினார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்காக பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் போராடினார். ஆதிக்க சாதியினால் தொடர்ந்து சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, 17-8-1932 அன்று கூடிய பிரிட்டிஷ் பாராளுமன்றம் விடுதலை அளித்தது. பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வேண்டி விரும்பிய அரசியல் அதிகாரத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கான ‘சுதந்திரப் பிரகடனம்’ அது. இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய எம்.கே.காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார உயர்விற்காக அவர்கள் போராடிப் பெற்ற அரசியல் விடுதலையை சாகும்வரை உண்ணவிரதம் என்ற கபட நாடகத்தின் மூலம் தட்டிப் பறித்தார். புரட்சியாளர் அம்பேத்கர் போராடிப் பெற்ற சுதந்திரத்தை நயவஞ்சகமாகக் குள்ளநரி பறித்துக்கொண்டது.

ஆனால் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்விற்காகக் குள்ளநரி ஒன்று போராடியதாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அது உழைத்ததாகவும் இந்திய வரலாற்றைத் தலைகீழாக மாற்றித் தவறாக எழுதப்பட்டுள்ளது. அப்படி எழுதப்பட்ட வரலாற்றை உலக மக்களுக்கு இன்று வரை அது போதித்து வருகிறது. இம்மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, இந்து மதமும், இந்து சனாதனிகளான பார்ப்பனிய, பணியா கும்பல்களும், இந்த மக்களைக் காந்தியின் விசுவாசிகளாகவும் மாறியுள்ளனர்.

இந்து வெறியரான, தலித்தின மக்களின் நயவஞ்சக துரோகியான காந்தி என்பவர் இம்மக்களின் ‘ஆபத்பாந்தவர் அல்ல’ என்ற வரலாற்று உண்மைகளை காந்தி வாழ்ந்த காலத்திலேயே அம்பலப்படுத்தினார் மாமேதை பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். இந்தப் பசுத்தோல் போர்த்திய புலி எவ்வாறு தலித் விரோதப் போக்கை தலித் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டது என்பதை அனைத்து மக்களிடமும் ஆய்வுக்குக் கொண்டு செல்லும் நோக்குடனேயே ‘காந்தியின் தீண்டாமை’ – என்ற இத்தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு திறந்த வாசிப்புக்கும், பொது விவாதத்திற்கும் உங்களை அழைக்கிறேன்.

தோழமையுடன்,
மருத்துவர். நா.ஜெயராமன்
‘அபெகா’ பண்பாட்டு இயக்கம்
(அம்பேத்கர் பெரியார் காரல் மார்க்ஸ்)
இரண்டாம் தளம்,
832, கீழ ராஜ வீதி, புதுக்கோட்டை – 622 001.
தொலைபேசி எண்: 04322 – 220061, 232126.
E.mail : drnjayaraman@yahoo.com

3 comments:

  1. பைத்தியக்காகாரத்தனமான பதிவு
    சிறு வயதில் காந்தி பற்றி நல்லது கேட்டீர்கள்
    பின்பு அவர் பற்றி கெட்டதாக சொல்லபட்டதை கேட்டீர்கள்
    உங்களால் மகாத்மாவை சீராக உணர முடியவில்லை
    ஒருவரை குறை பேச துரும்பை கூட தூணாக மாற்றி பேசலாம் என்பதை தான் தங்கள் பதிவில் காண முடிகிறது

    இந்திய சுதந்திரம் என்பது நீங்கள் நினைப்பதுபோல் சொல்வது போல் சுருங்கிய நிகழ்வுகள் இல்லை
    சுதந்திர போராட்ட காலத்தவர்கள் யாரையும் பழிக்கும் எந்த தகுதியும் நமக்கு இல்லை

    ReplyDelete